சாலை நடுவே ஆடவர் படுத்துக்கிடந்த சம்பவம் அங் மோ கியோவில் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) காலை 10.30 மணியளவில் நிகழ்ந்தது.
அவர் படுத்துக்கிடப்பதைக் காட்டும் காணொளிக் காட்சி, அவ்வழியாக வந்துகொண்டிருந்த கார் ஒன்றின் கண்காணிப்புக் கருவியில் பதிவானது.
அங் மோ கியோ அவென்யூ 3 வழியாக சென்றுகொண்டிருந்த அந்த கார், அங் மோ கியோ அவென்யூ 6ல் இடதுபுறம் திரும்பவிருந்தது.
அந்த ஆடவர் சாலையின் ‘ஸீப்ரா கிராசிங்’கில் படுத்துக்கிடப்பதைக் கண்டதும் கார் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தினார். அப்போதிலிருந்து ஏறக்குறைய 13 வினாடிகளுக்கு அந்த ஆடவர் ஒன்றுமே தெரியாததுபோல தொடர்ந்து சாலையில் படுத்துக்கிடந்தார்.
அதற்குள் மற்றொரு நடையர் சாலையைக் கடக்கத் தொடங்கிவிட்டார்.
படுத்துக்கிடந்த ஆடவர், எழுந்து நின்று ‘ஏஎம்கே ஹப்’ கடைத்தொகுதியை நோக்கி சர்வ சாதாரணமாக நடக்கத் தொடங்கினார்.
வாகனமோட்டி விபத்தை ஏற்படுத்த வைக்கவே அந்த ஆடவர் இந்த வினோதச் செயலில் ஈடுபட்டதாக இணையவாசிகள் சிலர் விமர்சித்தனர்.
சமூக ஊடகங்களில் இந்தக் காணொளியைக் கண்டு பரபரப்பூட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் அவ்வாறு செய்திருக்கலாம் என்று வேறு சிலர் கருத்துரைத்தனர்.