அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடையில் தனக்கு உறிஞ்சுகுழல் தர மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆடவர் ஒருவர் இரண்டு கத்திகளுடன் அங்கு திரும்பிச் சென்று கடைக்காரரைத் தாக்கப்போவதாக மிரட்டியிருக்கிறார்.
இந்தச் சம்பவம் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி பிற்பகல் 1.57 மணக்கு 78 ரெட்ஹில் லேனில் நிகழ்ந்ததாக ஷின் மின் ஊடகம் தெரிவித்தது.
குற்றவாளியான 55 வயது வூ ஷிஜியன் ரொட்டியும் டின்னில் உள்ள பானமும் வாங்க கடைக்குச் சென்றிருந்தார். அப்போது கடைக்காரரான 42 வயது பிரபு கருப்பையாவிடம் உறிஞ்சுகுழல் கேட்டிருக்கிறார்.
கடைக்காரர் தனக்கு உறிஞ்சுகுழலைத் தர மறுத்தார் என்று வூ குற்றஞ்சாட்டினார். அதனைத் தொடர்ந்து வாக்குவாதம் மூண்டது.
கோபத்தில் கடையிலிருந்து புறப்பட்ட வூ, சில நிமிடங்களுக்குப் பிறகு இரண்டு கத்திகளுடன் திரும்பிவந்தார். அவர் கருப்பையாவை மிரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடையில் உள்ள பணப் பெட்டியை, வூ தட்டிச் சென்றதாகவும் ஷின் மின் குறிப்பிட்டது.
இச்சம்பவம் குறித்து கருப்பையா உடனடியாகக் காவல்துறையிடம் புகாரளித்தார். தான் வசிக்கும் அதே புளோக்கில் வூ மேல் மாடி வீட்டில் வசிப்பதாக அவர் தெரியப்படுத்தினார்.
அன்று பிற்பகல் வூ கைது செய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
வூவுக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கெனவே பலமுறை சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டிருக்கும் அவருக்குப் பழைய விதிமீறல் ஒன்றுக்காக மேலும் ஏழு நாள்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

