போலி ஆவணங்கள் சமர்ப்பித்து சிங்கப்பூரில் கூடுதல் நாள்கள் தங்க எண்ணிய மலேசிய ஆடவருக்கு 20 வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் கல்வி அமைச்சின் துணைப்பாடக் கட்டண சலுகை பெற்று மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 2008ஆம் ஆண்டு படிக்க வந்தார் 34 வயது மகேந்திரன் முனியாண்டி.
துணைப்பாடக் கட்டண சலுகைபெற்றதால் அவர் மூன்று ஆண்டுகள் சிங்கப்பூரில் வேலை செய்யவேண்டும்.
2011 ஆம் ஆண்டு பட்டம்பெற்ற ஆடவர், 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரில் வேலை செய்தார்.
கல்வி அமைச்சின் ஒப்பந்தம் முடிந்ததால் அவரின் வேலை அனுமதி அட்டையும் காலாவதியானது.
அதன் பின்னர் ஆடவர் ஓர் ஆண்டு நீண்ட கால அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்து சிங்கப்பூரில் தங்க அனுமதியும் பெற்றார்.
அனுமதி காலாவதியாவதற்கு முன்னர் மகேந்திரன் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையத்திடம் மீண்டும் ஓர் ஆண்டு நீண்ட கால அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்தார்.
ஆடவர் கல்வியமைச்சிடம் ஒப்பந்தம் செய்தது போல் சிங்கப்பூரில் மூன்று ஆண்டுகள் வேலை செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
அதற்காக அவர் போலியான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார்.
ஆடவரின் ஆவணங்கள் பொய்யானவை என்று கண்டுபிடித்த அதிகாரிகள் காவல்துறையில் புகார் கொடுத்தனர்.
அதன் பின்னர் நடந்த விசாரணையில் ஆடவர் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டது.