சோல்: தென்கொரியாவில் மாடிவீட்டிலிருந்து ஒருவர் நாயை வீசியெறிவதைப் பார்த்த வழிப்போக்கர் அருகில் இருந்த விலங்குகளின் மருத்துவமனைக்கு அதனை எடுத்துச் சென்றார். அங்கு அதற்கு உடனடி உதவி வழங்கப்பட்டாலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
மிருகவதை சட்டத்தை மீறிய குற்றத்துக்காக பெயரிடப்படாத அந்த 30 வயது மாடிவீட்டு ஆடவருக்கு சோல் நகர மாவட்ட நீதிமன்றம் 2 மில்லியன் தென்கொரிய வொன் (2,000 வெள்ளி) அபராதம் விதித்தது.
கடந்த 10 ஆண்டுகளில் தென்கொரியாவில் மிருக வதை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தேசிய காவல் முகவையின் தரவுகளின்படி, மிருக பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக 98 சம்பவங்கள் 2011ல் பதிவாகியிருந்தன. அந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து, 2021ல் 1,072 குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் மிருக வதை குற்றத்துக்கு அபராதமும் சிறைத் தண்டனையும் வழங்கப்படுகின்றது.

