புக்கிட் திமா விரைவுச்சாலையில் (பிகேஇ) கார், வேன், மோட்டார்சைக்கிள் ஆகியவை சம்பந்தப்பட்ட விபத்தைத் தொடர்ந்து, ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் புக்கிட் திமா விரைவுச்சாலையில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி காலை 9.10 மணிக்கு விபத்து நடந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
அதே நேரத்தில் தனக்குத் தகவல் கிடைத்ததாகவும், புக்கிட் திமா விரைவுச்சாலையின் புக்கிட் பாஞ்சாங் வெளிவழிக்கு முன்னர் விபத்து நடந்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
மோட்டார்சைக்கிள் தீப்பிடித்துக்கொண்டதாகவும், தீயணைப்பானைக் கொண்டு அதை அணைத்ததாகவும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. தீ ஏற்பட்டதற்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.
மோட்டார்சைக்கிள் ஓட்டுநரான 26 வயது ஆடவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார். கார் ஓட்டுநரான 73 வயது ஆடவர் விசாரணையில் உதவுவதாக காவல்துறை கூறியது.
விபத்து குறித்து காவல்துறை விசாரணை தொடர்கிறது.