வேறொருவரின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பணிப்பெண்ணைப் பாலியல் ரீதியாகத் தாக்கியதாகக் கூறப்படும் ஆடவர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதியன்று நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் குறித்து வழக்கு விசாரணை நடத்தப்படுகிறது.
மதுபோதையில் இருந்த 40 வயது மார்க் கலைவாணன் தமிழரசன் திறந்துகிடந்த ஒரு வீட்டிற்குள் புகுந்ததாக அறியப்படுகிறது.
அங்கு தமது அறையில் இருந்த பணிப்பெண்ணை கலைவாணன் நெருங்கியதாகக் கூறப்படுகிறது.
தம்மைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பணிப்பெண்ணிம் தாம் ஒரு போலிஸ் அதிகாரி என்று கலைவாணன் பொய் கூறியதாகவும் கடப்பிதழ், வேலை அனுமதிச் சீட்டு, பணம் ஆகியவற்றைக் காட்டுமாறு கூறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அந்தப் பணிப்பெண் மறுப்பு தெரிவித்தபோது, கலைவாணன் அவரை மானபங்கம் செய்ததாக அரசு வழக்கறிஞர்கள் கூறினர். அப்போது நோய்வாய்ப்பட்டு படுத்தப்படுக்கையாக இருந்த பணிப்பெண்ணின் முதலாளியுடையலாளியுடைய தாயார் பக்கத்து அறையில் இருந்தார்.
பணிப்பெண்ணை கலைவாணன் கழிவறைக்குள் இழத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
முரண்டுபிடித்தால் அடிவிழும் என்று பணிப்பெண்ணை அவர் மிரட்டியுள்ளார்.
அதை அடுத்து அவர் அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக தாக்கியதாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அப்போது வெளியே யாரோ நடக்கும் சத்தம் கேட்டு அங்கிருந்து அந்தப் பணிப்பெண் வெளியே ஓடியதாகக் கூறப்படுகிறது. வீட்டிற்கு வெளியே இரண்டு போலிஸ் அதிகாரிகளைக் கண்டதாகவும் அவர்களிடம் அவர் உதவி கேட்டதாகவும் அறியப்படுகிறது.
கலைவாணன் அந்த வீட்டில் பணிப்பெண்ணத் தாக்கியபோது சத்தம் கேட்டதாகவும் அதையடுத்த அண்டைவீட்டுக்காரர் ஒருவர் போலிசாரை அழைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பணிப்பெண்ணின் கழுத்திலும் முதுகிலும் நகக் கீறல்கள் இருந்ததாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பணிப்பெண்ணுடைய சம்மதத்துடன் அவருடன் பாலியல் ரீதியில் கலைவாணன் நெருக்கமாக இருந்ததாக தற்காப்பு வழக்கறிஞர் கூறினார். கலைவாணனை அந்தப் பணிப்பெண்தான் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக அவர் வாதிட்டார்.
வழக்கு விசாரணை தொடர்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கலைவாணனுக்கு எட்டிலிருந்து 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity