கடந்த வாரம் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி அருகே விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற 30 வயது கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுமையான காயங்களை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக அந்த ஆடவர் திங்கட்கிழமை (மே 4) கைது செய்யப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் காவல்துறை தெரிவித்தது.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் உட்லண்ட்ஸ் குறுக்குச்சாலைக்கு முன்னர் ஏப்ரல் 26ஆம் தேதி இரவு 10.50 மணியளவில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் அவர் தேடப்பட்டு வந்தார்.
இரண்டு கார்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் மோதிய அந்த விபத்தில் 32 வயது மோட்டார் சைக்கிளோட்டி காயமடைந்தார். அவரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.
விரைவுச் சாலையின் முதல் தடத்தில் சென்றுகொண்டிருந்த வெள்ளை நிற கார் ஒன்றுடன் கறுப்பு நிற கார் மோதிய பின்னர் இரு கார்களும் நின்றுவிட்டதையும் காரில் இருந்த கேமரா பதிவு செய்திருந்தது.
வெள்ளை நிற காரிலிருந்து ஓட்டுநர் இறங்குவதற்குள் கறுப்பு நிற கார் பின்னோக்கிச் சென்று இரண்டாவது தடத்தில் தப்பிச் செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் அது மோதியது. மேலும் இரு வாகனங்கள் அதிர்ஷ்டவசமாகத் தப்பின.
அந்தச் சம்பவங்களுக்குப் பின்னர் கறுப்பு நிற கார் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

