சாங்கி விமான நிலையக் கழிவறையில் பெண் ஒருவரைக் காணொளி எடுத்த 32 வயது ராமு ராஜபாண்டிக்கு வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 12) 13 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தக் குற்றச் செயலை அவர் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதியன்று புரிந்தார்.
அப்போது அவர் குடிபோதையில் இருந்தார்.
அப்பெண்ணின் அனுமதி இன்றி அவரை முறையற்ற வகையில் காணொளி எடுத்த குற்றத்தை இந்திய நாட்டவரான ராமு ஒப்புக்கொண்டார்.
மதுபோதையில் பிடோக் ரெசர்வார் பூங்காவில் நிர்வாணமாக இருந்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
ராமு, சிங்கப்பூரில் மின்சாரத் தொழில்நுட்பராகப் பணிபுரிந்தவர்.
2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதியன்று சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்திலிருந்து அவர் இந்தியா செல்வதாக இருந்தது.
ஆனால் அதற்கு முன்பு அவர் பெண்களுக்கான கழிவறைக்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணைக் காணொளி எடுத்தார்.
தொடர்புடைய செய்திகள்
ராமு காணொளி எடுப்பதை அப்பெண் பார்த்ததை அடுத்து, அவர் கையும் களவுமாகச் சிக்கினார்.
அவர் கைது செய்யப்பட்டு பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஏறத்தாழ எட்டு மாதங்கள் கழித்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதியன்று அவர் மதுபோதையில், ஆடையின்றி பிடோக் ரெசர்வார் பூங்காவில் இருந்ததைப் பெண் ஒருவர் பார்த்தார்.

