பிரின்செப் ஸ்திரீட் தேவாலயத்தில் பலரை அறைந்த ஆடவர் கைது

பிரின்செப் ஸ்திரீட் தேவாலயத்தில் பலரை அறைந்த ஆடவர் கைது

1 mins read
75087423-bcba-4ec9-89f5-ab6d5faafac9
சிங்கப்பூர் லைஃப் தேவாலயம் 144 பிரின்செப் ஸ்திரீட்டில் அமைந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்

பிரின்செப் ஸ்திரீட்டிலுள்ள தேவாலயம் ஒன்றில்  பலரை அறைந்ததாகக் கூறப்படும் ஆடவர் ஒருவர், பொதுமக்களுக்குத் தொல்லை அளித்த குற்றத்திற்காக ஞாயிற்றுக்கிழமை (மே 3) கைது செய்யப்பட்டார்.

 பிரின்செப் ஸ்திரீட் புளோக் 144ல் உள்ள ‘சிங்கப்பூர் லைஃப் சர்ச்’ (Singapore Life Church) தேவாலயத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து, மே 3ல் காலை 9 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் சிங்கப்பூர்க் காவல்துறை தெரிவித்தது.

அந்த ஆடவர் அங்குப் பலரை அறைந்திருப்பதையும் அதிகாரிகள் வருவதற்கு முன்பே அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதையும் காவல்துறை உறுதிசெய்தது.

அறையப்பட்டதில் 66 வயது மாது ஒருவருக்கு, கண்ணுக்கு அருகே ரத்தக்கசிவு ஏற்பட்டதாகக் காவல் துறையினர் கூறினர். அவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தேவாலயத்தின் வழிபாட்டுச் சேவைகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

காவல் துறையினர் பின்னர் அந்த 33 வயது மலேசிய ஆடவரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அந்த ஆடவர் அந்தத் தேவாலயத்திற்கு நன்கு அறிமுகமானவர் என்பதும், இதற்கு முன்பும் சில முறை அங்குத் தொல்லை அளித்துள்ளார் என்பதும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்