மாது ஒருவரின் பின்பக்கத்தில் தட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஆடவர் ஒருவர், சமரசத் தீர்வு ஏற்பட்டதையடுத்து, அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
தங்ளின் காவல் நிலைய முன்னாள் அதிகாரி பால் லிம் சூன் வுயீ, 52, தனது செயலுக்காக, பாதிக்கப்பட்ட மாதிடம் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
சட்டப்படி, சில குறிப்பிட்ட குற்றங்கள் மட்டுமே சமரசமாகத் தீர்த்துக்கொள்ளப்படலாம். காயம் ஏற்படுத்துவது, மானபங்கச் செயலில் ஈடுபடுவது போன்ற சிக்கலற்ற வழக்குகள் அவற்றில் அடங்கும்.
சமரசத் தீர்வு என்பது, மன்னிப்பு கேட்டு இழப்பீடு வழங்குவது குறித்து பாதிக்கப்பட்டவருடன் உடன்பாடு செய்துகொள்வதாகும்.
அதற்கு அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் ஒப்புதல் வழங்குவதற்கு முன்னர், பொது நலன், குற்றம் புரிந்த நேரத்தில் இருந்த சூழ்நிலை, மற்ற முக்கியக் காரணங்கள் ஆகியவற்றைக் கருத்தில் எடுத்துக்கொள்வார்.
குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ள லிம், முன்னதாக 2022ஆம் ஆண்டில் அந்த மாதை மானபங்கப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.
அவர் 2022ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி இரவு 9 மணிவாக்கில் புக்கிட் மேராவில் உள்ள கட்டடம் ஒன்றில், தனது இடக்கையால் அந்த 25 வயது மாதின் பின்புறத்தைத் தட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

