பொங்கோல் வாட்டர்வே பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (மே 31) காலையில் 36 வயது ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பூங்காத் திடலுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் அந்த ஆடவர் அசைவற்ற நிலையில் கிடந்ததாகச் சீன மொழி நாளிதழான ‘சாவ்பாவ்’ தெரிவித்தது.
சம்பவ இடத்திலேயே ஆடவர் இறந்துவிட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் உறுதிசெய்ததாகவும் அது கூறியது.
காலை 10.20 மணியளவில் செய்தியாளர்கள் அங்குச் சென்றபோது, மரத்தடியில் நீல நிறக் கூடாரம் ஒன்றும், அதனைச் சுற்றித் தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன.
குறைந்தது ஆறு காவல்துறை அதிகாரிகள் அங்கு விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
காலை 9 மணியளவில் 41 பொங்கோல் வேயிலிருந்து உதவி கோரும் அழைப்பு வந்ததாகக் காவல்துறை உறுதிப்படுத்தியது.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த மரணத்தில் எந்தவிதச் சதிச்செயலும் இருப்பதாகக் காவல்துறை சந்தேகிக்கவில்லை.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

