துபாயிலிருந்து நாடு திரும்பிய முதல் தொகுதி பயணிகளைச் சாங்கி விமான நிலையத்தில் அரவணைத்து ஆறுதலடைந்தனர் உற்றார் உறவினர்கள்.
ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் தொடுத்ததை அடுத்து ஐந்து நாள்களுக்கு மத்திய கிழக்கு வட்டாரத்துக்கான அனைத்து விமான நிலையங்களும் முடங்கின.
துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கிக்கொண்ட பல சிங்கப்பூரர்கள் நாடு திரும்ப அவசரமாகப் பயணச்சீட்டுகளை முன்பதிவுசெய்ய முற்பட்டும் பலன் கிடைக்கவில்லை.
ஒருவழியாக எமிரேட்ஸ், எட்டிஹாட் ஏர்வேஸ் ஆகிய விமான நிறுவனங்கள் ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குச் சேவை வழங்கப்போவதாக மார்ச் 4ஆம் தேதி அறிவித்தது பலருக்கு நிம்மதி அளித்தது.
குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள விமான இருக்கைகளுக்கான பயணச்சீட்டுகளை அளவுக்கு அதிகமானோர் ஒரே நேரத்தில் முன்பதிவுசெய்ய முற்பட்டதால் கூடிய விரைவில் பயணச்சீட்டுகளை வாங்கிக்கொள்ளும்படி அபுதாபியில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகமும் துபாயில் உள்ள சிங்கப்பூர்த் துணைத் தூதரகமும் சிங்கப்பூரர்களை அறிவுறுத்தியது.
சாங்கி விமான நிலையத்தில் காலை 8.20 மணியளவில் ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளிலிருந்து முதல் விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கியது.
எமிரேட்ஸ் விமானம் EK315, உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் துபாயிலிருந்து புறப்பட்டது.
சாங்கி விமான நிலையத்தில் டோஹாவிலிருந்தும் கத்தாரிலிருந்தும் மார்ச் 5ஆம் தேதி வரவிருந்த ஐந்து விமானங்கள் கடைசி நிமிடத்தில் ரத்துசெய்யப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, ஓமான் தலைநகர் மஸ்கட்டில் சிக்கியுள்ள சிங்கப்பூரர்களை மார்ச் 7ஆம் தேதி திரும்ப அழைத்துவர அரசாங்கம் திட்டமிடுவதாக வெளியுறவு அமைச்சு, வர்த்தக, தொழில் அமைச்சு துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் தெரிவித்தார்.
கூடுதல் விமானங்கள் மூலம் சிங்கப்பூரர்களை அழைத்துவர விமான நிறுவனங்களுடனும் மத்திய கிழக்கு வட்டாரத்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடனும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு செயல்படுவதாக அவர் கூறினார்.
சவூதி அரேபியாவின் ரியாத்தில் அடுத்த விமானங்க நிலையங்களும் செயல்படுகின்றன. அடுத்த சில நாள்களில் பஹ்ரேனிலும் கத்தாரிலும் சிக்கியுள்ள சிங்கப்பூரர்களை ரியாத்துக்கு அழைத்துசெல்வதற்கான உதவிகளையும் வெளியுறவு அமைச்சு செய்யவிருக்கிறது.
“தாய்நாட்டுக்குத் திரும்ப உதவி கோரியுள்ள சிங்கப்பூரர்களைத் தொடர்புகொள்வோம்,” என்று நாடாளுமன்றத்துக்கு வெளியே திருவாட்டி கான் கூறினார்.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு, மத்திய கிழக்கு வட்டாரத்திற்கு நெருக்கடி உதவிக் குழுவை அனுப்பியுள்ளது என்ற அவர், மூன்று அதிகாரிகள் மஸ்கட்டில் இருப்பதைக் குறிப்பிட்டார். மேலும் இரண்டு அதிகாரிகள் ரியாத்துக்கு அனுப்பிவைக்கப்படுவர்.
மார்ச் 7ஆம் தேதி, ஓமான் உள்ளிட்ட ஐக்கிய அரபுச் சிற்றரசு நாடுகளிலிருந்து சிங்கப்பூரர்கள் விமானங்கள் மூலம் திரும்ப அழைத்துவரப்படுவர்.
அங்குதான் ஏறக்குறைய 60 விழுக்காட்டு சிங்கப்பூரர்கள் வெளியுறவு அமைச்சிடம் தங்கள் விவரங்களை மின்பதிவு செய்துள்ளனர்.

