ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடல்நாகப் படகுப் போட்டி மீண்டும் மரினா பே வட்டாரத்துக்குத் திரும்பியுள்ளது.
மனநலம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க இப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
‘ரைஸ் அபவ் தெ வேவ்ஸ்’ (Rise Above The Waves) என்ற கருப்பொருளில் ஐஎச்எச் ஹெல்த்கேர் x சிங்கப்பூர் சீ ரிகாட்டா (IHH Healthcare x Singapore Sea Regatta) என்ற கடல்நாகப் படகுப் போட்டி சனிக்கிழமை (செப்டம்பர் 13) அறிமுகம் செய்யப்பட்டது.
கொவிட்-19 நோய்ப் பரவலுக்குப் பிறகு மரினா பே வட்டாரத்தில் கடல்நாகப் படகுப் போட்டி நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்று நம்பப்படுகிறது.
இதற்குமுன் 2019ஆம் ஆண்டு டிபிஎஸ் மரினா ரிகாட்டா என்ற கடல்நாகப் படகுப் போட்டி நடத்தப்பட்டது.
மரினா பே வட்டாரத்தில் இரண்டு நாள்கள் நடைபெறும் கடல்நாகப் படகுப் போட்டிகளில் ஐந்து நாடுகளிலிருந்து 64 அணிகளைச் சேர்ந்த 1,800க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வர்.
சுகாதார அமைச்சர் ஓங் யீ காங், தொடக்கப் போட்டியில் கலந்துகொண்டார். சுகாதார அமைச்சின் அணி அமைச்சர் கிண்ணப் போட்டியில் பங்கேற்றது.
மழையையும் பொருட்படுத்தாது தொடங்கிய 200 மீட்டர் போட்டியில் சுகாதார அமைச்சு, சிங்கப்பூர் மனநலச் சங்கம், ஐஎச்எச் ஹெல்த்கேர், சிங்ஹெல்த் ஆகியவற்றைச் சேர்ந்த 70 பேர் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதி, சிங்கப்பூர் மனநலச் சங்கத்துக்கு வழங்கப்படும்.
போதிய அளவு பேசப்படாத மனநல விவகாரம் மீது கவனம் செலுத்த அதைக் கருப்பொருளாகத் தேர்வுசெய்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டுத் தலைவர் எடலின் சீ கூறினார்.