கடல்துறை எரிவாயு எண்ணெய் கையாடல்: 11 ஆடவர்கள் கைது

கடல்துறை எரிவாயு எண்ணெய் கையாடல்: 11 ஆடவர்கள் கைது

1 mins read
98171e81-1b0f-49ee-9825-daeb7a6b9b71
சட்டவிரோதப் பரிவர்த்தனையில் தொடர்புடைய இழுவை படகுகள். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சிங்கப்பூரில் சட்டவிரோத கடல்துறை எரிவாயு எண்ணெய் பரிவர்த்தனையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 11 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்தக் கைது நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) அதிகாலையில் நிகழ்ந்ததாகவும் பிடிபட்டவர்கள் 32 வயதுக்கும் 58 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரும், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட இழுவைப் படகு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த இழுவைப் படகுகளில் இருந்த ஊழியர்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

சிங்கப்பூரின் கடல் எல்லைக்குட்பட்ட சிலாட் பாவ் என்னும் பகுதியில் அதிகாலை 1.40 மணியளவில் அந்த 11 ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட படகின் நான்கு ஊழியர்கள் கிட்டத்தட்ட $5,000 மதிப்புள்ள கடல்துறை எரிவாயு எண்ணெய்யை, தங்களது நிறுவனத்திற்குத் தெரியாமல் முறைகேடாகப் பரிவர்த்தனை செய்தது, ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட அனைவர்மீதும் திங்கட்கிழமை (பிப்ரவரி 22) குற்றம் சாட்டப்படும்.

குறிப்புச் சொற்கள்