சிங்கப்பூரின் மேபேங்க் வங்கி அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட 800க்கும் மேற்பட்ட இளநிலை ஊழியர்களுக்கு ஒருமுறை (மட்டும் தரக்கூடிய ) வழங்குத் தொகையை அளிக்கவுள்ளது.
வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க அவர்களுக்கு அந்தச் சிறப்புத் தொகை வழங்கப்படுவதாக அவ்வங்கியின் பேச்சாளர் த பிஸ்னஸ் டைம்ஸ் நாளிதழிடம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) தெரிவித்தார்.
வழங்குத் தொகையில், தொழிற்சங்க உறுப்பினர்களான நிர்வாகிகளுக்கு S$1,250 உட்பட 600க்கும் மேற்பட்ட இளநிலை ஊழியர்களுக்கு கூடுதலாக கால்மாத போனஸ் தொகையும் வழங்கப்படும்.
சிங்கப்பூர் மேபேங்க் வங்கி 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணியில் வைத்துள்ளதாகத் தெரிகிறது.
“சவாலான சூழலில் எங்கள் ஊழியர்கள் சிறந்த அர்ப்பணிப்பை வழங்கியுள்ளனர். இந்த வழங்குத் தொகை, நேரடியாக பாதிக்கும் அன்றாடச் செலவுகளைச் சமாளித்து அவர்களின் மனநிலையை மேம்படுத்த நாங்கள் எடுத்துள்ள நல்லாதரவு முயற்சிகளில் ஒன்று,” என மேபேங்க் சிங்கப்பூரின் தலைமை நிர்வாக அதிகாரி அல்வின் லீ கூறினார்.
“கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட S$500ஐ விட 2026ஆம் ஆண்டில் ஒரு ஊழியருக்கான வங்கியின் உதவித் தொகை இரட்டிப்பாகியுள்ளது,” என்று வங்கியின் மனிதவளத் தலைவர் திரு வோங் கெங் ஃபை தெரிவித்தார்.
நடைமுறை நிலவரத்தைக் கருத்தில்கொண்டு, மாறுபட்ட பொருளியல் சூழ்நிலைக்கு ஏற்ப மேபேங்க் வங்கி அர்த்தமுள்ள வகையில் ஊழியர்களுக்கு உதவ முற்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் டிபிஎஸ், யுஓபி வங்கிகளும் கடந்த பிப்ரவரி மாதத்தில் அவற்றின் இளநிலை ஊழியர்களுக்கு ஒருமுறை வழங்குத் தொகையை அறிவித்திருந்தன.

