ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா (ஆர்டபிள்யுஎஸ்) சூதாட்டக் கூடத் தலைமை அதிகாரி ஆண்ட்ரூ மெக்டோனல்டும், மற்றொரு ‘ஆர்டபிள்யுஎஸ்’ நிர்வாகியும் மரினா பே சேண்ட்ஸ் (எம்பிஎஸ்) வளாகத்திற்குள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ள, அதிக அளவில் பணம் பயன்படுத்திச் சூதாடுவோரை நாடியதாகக் கூறப்படுகிறது.
‘எம்பிஎஸ்’ஸில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் சூதாட்டக் கூட நிர்வாகியாக இருந்த திரு மெக்டோனல்ட், அது பற்றி தமது லிங்க்ட்இன் பக்கத்தில் ஆகஸ்ட் 18ஆம் தேதி பகிர்ந்துகொண்டார்.
அவருக்கு எதிரான தடை, மேல்விவரங்கள் வெளிவரும்வரை நடப்பில் இருக்கும் என்றும் அவர் ‘எம்பிஎஸ்’ வளாகங்களுக்குள் நுழைந்தாலோ நுழைய முயற்சி செய்தாலோ அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க மரினா பே சேண்ட்சுக்கு உரிமை உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டது.
‘ஆர்டபிள்யுஎஸ்’ஸின் வர்த்தக மேம்பாட்டுப் பிரிவின் உதவித் துணைத் தலைவர் லுயிஸ் இங்கிற்கும் அந்தத் தடை விதிக்கப்பட்டது. அது ஜூலை 31ஆம் தேதி முதல் நடப்பில் உள்ளது. அதன் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில், திரு மெக்டோனல்ட் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
பொது ஒழுங்கை மீறும் எந்தவொரு செயலையும் புரியவில்லை என்பதே தமது கட்சிக்காரரின் நிலைப்பாடு என்று திரு மெக்டானல்டின் வழக்கறிஞர் சலீம் இப்ராகிம் கூறினார்.