பாதுகாப்புக் குறைபாடு: உலோக வேலைப்பாட்டு நிறுவனங்களுக்கு அபராதம்

பாதுகாப்புக் குறைபாடு: உலோக வேலைப்பாட்டு நிறுவனங்களுக்கு அபராதம்

1 mins read
d65a0554-8dec-40ef-a2e2-0f971e15830b
மனிதவள அமைச்சு 650க்கும் மேற்பட்ட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.  - படம்: மனிதவள அமைச்சு

கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் இடம்பெற்ற அமலாக்க நடவடிக்கைகளின்போது மனிதவள அமைச்சு உலோக வேலைப்பாட்டு நிறுவனங்களுக்கு $32,000 அபராதம் விதித்தது.

650க்கும் மேற்பட்ட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது விதிமுறைகளுக்கு இணங்காததன் தொடர்பில் 498 எச்சரிக்கைக் கடிதங்கள் கொடுக்கப்பட்டன. அதோடு, 14 நிறுவனங்களுக்கு தகுதியிழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டதாக அமைச்சு டிசம்பர் 21ஆம் தேதியன்று ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.

இவ்வாண்டின் முற்பாதியில் உற்பத்தித் துறையில், ஊழியர்கள் மரணமடைந்த அல்லது மோசமாகக் காயமுற்ற சம்பவங்களில், 40 விழுக்காட்டுக்குமேல் உலோக வேலைப்பாட்டுத் துறையில் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்தச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சோதனை நடவடிக்கைகளின்போது, பயன்படுத்தப்படாத வாகனத்தில் சாவி வைக்கப்பட்டிருந்தது, தேய்ந்த டயர்களைக் கொண்ட பாரந்தூக்கி இருந்தது உள்ளிட்ட பாதுகாப்புக் குறைபாடுகளை அமைச்சு கண்டுபிடித்தது.

அடிக்கடி கருவிகளைப் பராமரிப்பது, வேலை இடங்களுக்குள் நுழையவும் வெளியேறவும் பாதுகாப்பான வழிகளை அமைத்துக்கொடுப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வேலை தொடங்குமுன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவா என்பதைச் சரிபார்க்கும்படி ஊழியர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லையென்றால், அதுபற்றி அவர்கள் தங்களின் முதலாளிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்