பேரகான், காஸ்வே பாயிண்ட்டில் பகுதிவாரிக் கடைகளை மூடுகிறது மெட்ரோ

பேரகான், காஸ்வே பாயிண்ட்டில் பகுதிவாரிக் கடைகளை மூடுகிறது மெட்ரோ

1 mins read
013a52d1-876a-4bbb-a06d-be6616ca0d5a
சில்லறை வணிகம் குறித்து மேற்கொள்ளப்பட்ட மறுஆய்வுக்குப் பிறகு, மெட்ரோ குழுமம் அதன் பகுதிவாரிக் கடைகளை மூடப்போவதாக அறிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மெட்ரோ குழுமம், பேரகானிலும் காஸ்வே பாயிண்ட்டிலும் உள்ள அதன் பகுதிவாரிக் கடைகளைக் குத்தகைக் காலம் முடியும்போது மூடவிருக்கிறது. சில்லறை வணிகம் குறித்து மேற்கொள்ளப்பட்ட மறுஆய்வுக்குப் பிறகு குழுமத்தின் முடிவு வந்துள்ளது.

குத்தகைக் காலம் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

சிங்கப்பூர்ப் பங்குச்சந்தையில் மெட்ரோ நிறுவனம் இடம்பெற்றுள்ளது. மற்ற வகைச் சில்லறை விற்பனை மாதிரிகளை நிறுவனம் ஆராய்ந்து வருவதாகச் சிங்கப்பூர்ப் பங்குச்சந்தை தெரிவித்தது.

புதிய வகைக் கடைகளை அறிமுகப்படுத்தத் தற்போதைய கட்டட உரிமையாளர்களுடனும் மற்றவர்களுடனும் பேசிவருவதாக மெட்ரோ கூறியது.

பயனீட்டாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப, இப்போதுள்ள பெரிய அளவிலான பகுதிவாரிக் கடையிலிருந்து அதிக நீக்குப்போக்குத்தன்மை கொண்ட கடைக்குப் படிப்படியாக மாறத் திட்டமிட்டுள்ளதாகவும் மெட்ரோ தெரிவித்தது.

மெட்ரோவின் புதிய சில்லறை விற்பனை உத்தி, வாடிக்கையாளர்களின் மாறிவரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யிப் ஹூங் முன் கூறியுள்ளார்.

மெட்ரோ நிறுவனம், அதன் புதிய சில்லறை வர்த்தக உத்திக்கான காலக்கெடுவை இன்னும் முடிவுசெய்து வருகிறது. மேலும், இதன் நிதித் தாக்கத்தைக் கணித்து வருகிறது. எனினும், அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி முடிவடையும் நிதியாண்டிற்கான நிறுவனத்தின் நிகரச் சொத்துகளிலும் ஒரு பங்கிற்கான லாபத்திலும் இந்த மாற்றம் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தாது என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது.

பேரகான் கடைத்தொகுதியைக் கேப்பிட்டலேண்ட் அண்ட் இன்டிகிரேட்டட் கமர்‌ஷியல் டிரஸ்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது. காஸ்வே பாயிண்ட் கட்டடத்தின் உரிமையாளர் ஃபிரேசர்ஸ் சென்டர்பாயிண்ட் டிரஸ்ட்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்சில்லறைவணிகம்