அதிகாரிகள் அறிவுறுத்தியும் குறிப்பிட்ட நேரத்திற்குள் குற்றவியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பொருளடக்கத்தை இணையத் தளங்கள் அகற்றத் தவறினால் அவை குற்றம் புரிந்திருப்பதாக எடுத்துக்கொள்ளப்படும்.
உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் பிப்ரவரி 27ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
இணையக் குற்றவியல் தீங்குச் சட்டத்தின்கீழ் பிறப்பிக்கப்படும் ஆணைகளுக்கு இணையத் தளங்கள் 24 மணி நேரத்திற்குள் இணங்க, அவற்றுடன் உள்துறை அமைச்சு செயல்பட்டு வருகிறது.
சென்ற ஆண்டு மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சென்ற ஆண்டு 46,563 மோசடிச் சம்பவங்கள் பதிவாயின. 2022ல் பதிவான 31,728 சம்பவங்களைக் காட்டிலும் இது அதிகம்.
புகார் செய்யப்பட்ட, இணையத்தளங்கள் சம்பந்தப்பட்ட மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை 2021லிருந்து 2023 வரை ஒரு மடங்குக்கும் மேல் அதிகரித்ததாக திருவாட்டி சுன் கூறினார்.
இணையச் செயலிகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த காவல்துறை எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யோ வான் லிங் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துப் பேசினார்.
திருவாட்டி சுன், இணையத்தளங்கள் சம்பந்தப்பட்ட மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிடாதபோதும், சென்ற ஆண்டு 13,725 சம்பவங்களில் மோசடிக்காரர்கள் சமூக ஊடகம் வழியாக பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்புகொண்டதாக காவல்துறை பிப்ரவரி 18ஆம் தேதி மோசடிச் சம்பவங்கள் தொடர்பான தனது வருடாந்திரப் புள்ளிவிவரங்களில் தெரிவித்தது.
2022ல் அந்த எண்ணிக்கை 7,599ஆக இருந்தது.
சட்டவிரோத இணைய நடவடிக்கைகளைச் சமாளிக்க தொடர்பு, தகவல் அமைச்சுடனும் மற்ற அமலாக்க அமைப்புகளுடனும் உள்துறை அமைச்சு இணைந்து செயல்பட்டு வருவதாக திருவாட்டி சுன் கூறினார்.