சிங்கப்பூரைச் சேர்ந்த இணைய ஊடுருவி ஒருவர், தனது கணினி அமைப்புகளுக்குள் ஊடுருவியதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜேம்ஸ் ராஜ் ஆரோக்கியசாமி என்ற அந்த இணைய ஊடுருவி, தற்காப்பு அமைச்சு மற்றும் பல அரசாங்க அமைப்புகளின் கணினிகளுக்குள் ஊடுருவியதாகவும் தமது செயல்கள் அரசாங்கத்திற்குத் தொல்லை அளிப்பதாக இருந்ததாகவும் இம்மாதம் 6ஆம் தேதி வலையொளி ஒன்றின்மூலம் தெரிவித்திருந்தார்.
சிங்கப்பூரின் நடப்பு விவகாரங்கள் தொடர்பான ‘பிளான் பி’ எனும் வலையொளி நிகழ்ச்சியில் ஜேம்ஸ் ராஜ் அவ்வாறு கூறியிருந்தார்.
இந்நிலையில், திங்கட்கிழமை வெளியிட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவு வழியாகத் தற்காப்பு அமைச்சு அவரது கூற்றை மறுத்துள்ளது.
“அவர் கூறுவதில் உண்மையில்லை. தற்காப்பு அமைச்சின் கணினி அமைப்புகள் ஒருபோதும் ஊடுருவப்பட்டதில்லை,” என்று அமைச்சு தெரிவித்தது.
‘தி மெசாயா’ என்ற புனைப்பெயரைக் கொண்ட ஜேம்ஸ் ராஜ் கடந்த 2013ஆம் ஆண்டு பல்வேறு அமைப்புகளின் கணினிச் சேவையகங்களை ஊடுருவினார்.
அதற்காக அவருக்கு 2015ஆம் ஆண்டு நான்கு ஆண்டுகளும் எட்டு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

