வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதற்கு முன்பு குற்றச்சாட்டுகள் திருத்தப்படுவது அரிதல்ல என்று கல்வி அமைச்சரும் பொதுச் சேவைக்குத் தலைமை தாங்கும் அமைச்சருமான சான் சுன் சிங் அக்டோபர் 14ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தொடர்பான வழக்கு குறித்து பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சில்வியா லிம் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சான் பதிலளித்தார்.
ஈஸ்வரனுக்கு எதிராக முதலில் சுமத்தப்பட்டிருந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் குற்றச்சாட்டுகள் குறைக்கப்பட்டதா என்று திருவாட்டி லிம் கேள்வி கேட்டார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் சான், வழக்குகள் விசாரணைக்கு வருவதற்கு முன்பு குற்றச்சாட்டுகள் திருத்தப்படுவது ஒன்றும் புதிதல்ல என்று கூறினார்.
விசாரணை மூலம் கிடைக்கும் தகவல்கள் காரணமாகக் குற்றச்சாட்டுகள் மாற்றியமைக்கப்படக்கூடும் என்றார் அவர்.
அக்டோபர் 3ஆம் தேதியன்று ஈஸ்வரனுக்கு 12 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

