போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் வியாழக்கிழமை (ஜனவரி 18) காலை 8 மணியளவில் நீதிமன்றத்தை வந்தடைந்தார்.
மூத்த வழக்கறிஞர் தவிந்தர் சிங் உள்ளிட்ட தமது வழக்கறிஞர் குழுவுடன் 61 வயதான ஈஸ்வரன் நீதிமன்றத்திற்கு வந்தார்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவால் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
விசாரணை முடியும் வரை அவரை விடுப்பில் இருக்கும்படி பிரதமர் லீ சியன் லூங் அறிவுறுத்தி இருந்தார்.
அடுத்த அறிவிப்பு வரும் வரை திரு ஈஸ்வரனின் மாதச் சம்பளம் 8,500 வெள்ளியாகக் குறைக்கப்பட்டது. அதே நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினருக்கான படித்தொகை அவருக்குத் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் ஈஸ்வரன் தொடர்பான விசாரணையை லஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவு முடித்துவிட்டது என்றும் விவகாரத்தை அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம் மறுஆய்வு செய்து வருகிறது என்றும் இம்மாதம் 9ஆம் தேதி கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியிலிருந்து 1997ஆம் ஆண்டு முதன்முதலாக நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ஈஸ்வரன், கடந்த 26 ஆண்டுகளாக அத்தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார்.
கடந்த 2011ஆம் ஆண்டு அவர் முழு அமைச்சராகப் பதவி உயர்த்தப்பட்டார். அப்போது பிரதமர் அலுவலக அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். கல்வி, உள்துறை, தொடர்பு, தகவல் அமைச்சராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
ஊழல் விசாரணை தொடர்பில் செல்வந்தர் ஓங் பெங் செங்கும் 2023 ஜூலை 11ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். சொத்துச் சந்தை தொழில்புரியும் திரு ஓங்கே கடந்த 2008ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தைக் கொண்டுவந்தார்.