பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சியைப் பிரதிநிதிக்கும் மரின் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதிக்கான வேட்பாளர் அணியை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வழிநடத்துவார்.
வணிக மேம்பாட்டு இயக்குநராகவும் கட்சியின் நீண்டகாலத் தொண்டூழியராகவும் சேவையாற்றி வரும் திருவாட்டி டயானா பாங் குழுத்தொகுதியின் புதுமுகமாக ஏப்ரல் 20ஆம் தேதி செய்தியாளர்களிடம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்.
உள்துறை, தேசிய வளர்ச்சித் துணை அமைச்சர் டாக்டர் முகம்மது ஃபைஷால் இப்ராகிம், 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மரின் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் களமிறங்குகிறார்.
முன்னைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சியா கியன் பெங், டின் பெய் லிங் இருவரும் தொடர்ந்து மரின் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் போட்டியிடுவார்கள்.
மரின் பரேட் குழுத் தொகுதியில் சேவையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது ஃபாமி அலிமான் இந்தத் தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
“தேர்தலில் திரு ஃபாமி வேறு தொகுதியில் நிறுத்தப்படுவாரா என்பது இன்னும் மூன்று நாள்களில் நடக்கவிருக்கும் வேட்புமனுத் தாக்கல் தினத்தன்று எடுக்கப்படும் முடிவைப் பொறுத்தது,” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் திரு டான்.
ஜூ சியாட் வட்டாரத்தை வழிநடத்திய அமைச்சர் எட்வின் டோங், ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மரின் பரேட் குழுத்தொகுதி, மெக்பர்சன், மவுண்ட்பேட்டன், பொத்தோங் பாசிர் தனித்தொகுதிகள் ஆகிய பகுதிகளிலிருந்து புதிய மரின் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதி உருவாக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாவது முறையாகத் தேர்தலில் போட்டியிடும் அமைச்சர் டான், கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தம்மை ஆதரித்து, ஊக்குவித்ததற்காக மரின் பரேட் குடியிருப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
“மசெகவின் பணி எப்போதும் தொடரும்,” என்றார் அவர்.
நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகத் திரு ஃபைஷால் 14 ஆண்டுகள் சேவையாற்றியபோதிலும், அவர் தொடர்ந்து மரின் பரேட் வட்டாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
வரும் தேர்தலில் மரின் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி போட்டியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.