எளிமையாக இருக்கும் வகையில், அமைச்சர்நிலைக் கட்டமைப்பைச் சீரமைக்க வேண்டும் என்ற பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
அரசியல் பதவி வகிப்போர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் சம்பளக் கட்டமைப்பு தொடர்பில் மறுஆய்வுக் குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதன் தொடர்பில், திரு சான் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) அமைச்சர்நிலை அறிக்கையைத் தாக்கல் செய்து உரையாற்றினார்.
குறிப்பாக, எம்ஆர்2, எம்ஆர்3 என்ற இரண்டு அமைச்சர்நிலைகள் ஒன்றிணைக்கப்பட்டு, ஒரே நிலையாக மாற்றப்படும். அவர்களுக்கு எம்ஆர்4 நிலையிலுள்ள அமைச்சரைப் போன்று 1.3 மடங்குச் சம்பளம் வழங்கப்படும்.
அதுபோல, மேயர், மூத்த நாடாளுமன்றச் செயலாளர், நாடாளுமன்றச் செயலாளர் ஆகியோரின் நிலைகளும் ஒன்றிணைக்கப்படும். அவர்களுக்கு எம்ஆர்4 நிலை அமைச்சரின் சம்பளத்தைப்போல 0.45 மடங்குச் சம்பளம் வழங்கப்படும்.


