பழச்சாறு விநியோகம் செய்யும் இயந்திரத்தில் உள்ள உறிஞ்சு குழாய் (ஸ்ட்ரா) ஒன்றை எடுத்து, தனது நாவினால் தடவி, பிறகு அதனை மீண்டும் இயந்திரத்தில் வைத்தார் 18 வயது ஆடவர்.
அதோடு அந்தச் செயலை அவர் காணொளியாக எடுத்து, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுவெளியில் குறும்புச் செயல் புரிந்த குற்றத்துக்கு அவர் கைது செய்யப்பட்டு விசாரணை தொடர்வதாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அறிவித்துள்ளது.
‘ஐஜூஸ்’ என்ற நிறுவனத்தின் ஆரஞ்சு பழச்சாறு விநியோகிக்கும் இயந்திரத்தில் கடந்த மார்ச் 12ஆம் தேதி அச்செயலை அந்த ஆடவர் செய்துள்ளார்.
மார்ச் 24ஆம் தேதி சமூக ஊடகத்தில் வலம் வந்தக் குறும்புச் செயல் பற்றிய விவரம் ஐஜூஸ் நிறுவனத்துக்குக் கிடைத்தது. நிறுவனம் மார்ச் 25ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்தது.
கூடுதல் சோதனைகள் இயந்திரத்தில் நடத்தப்பட்டு, புதிய உறிஞ்சு குழாய்கள் வைக்கப்பட்டதாகவும், சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஐஜூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தை மிகவும் முக்கியமானதாகக் கருதி மன்னிப்புக் கேட்டுக்கொண்டதுடன், ஆடவரின் செயல் ஆச்சரியமூட்டுவதாகவும் நிறுவனம் கருத்துரைத்தது.
குற்றஞ்சாட்டப்பட்ட அந்த ஆடவர் எண் 5, நேப்பாள் பார்க் முகவரியில் இயங்கும் தனியார் வர்த்தகப் பள்ளி மாணவர் என்று ‘ஸ்டோம்ப்’ இணைய ஊடகத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

