தமது சொந்த மனைவியை 2024ஆம் ஆண்டில் கொலை செய்த தற்போது 90 வயதான முதியவருக்கு ஏற்பட்டுள்ள கடுமையான அறிவாற்றல் குறைபாட்டால் அவர் விசாரணைக்குத் தகுதியற்றவர் என்று உயர்நீதிமன்றத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவருக்கு பெயரளவில் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) தீர்ப்பளித்தது.
சிங்கப்பூரின் குற்றவியல் சட்டப்படி நீதிமன்றம் ரிடாவி மொர்சுடின் என்ற அந்த குற்றவாளியை சட்ட அமைச்சரின் இறுதி முடிவுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
அதன்படி அவரை மனநல கழகத்துக்கு அனுப்பிவைப்பதா அல்லது வேறு பாதுகாப்பான இடத்தில் இருக்கவைப்பதா அல்லது நிபந்தனைகளுடன் விடுதலை செய்வதா என்பதை சட்ட அமைச்சர் முடிவு செய்வார்.
முதுமையால் குற்றவாளிக்கு ஏற்பட்டுள்ள அறிவாற்றல் குறைபாட்டால் அவர் செய்த கொலை சார்ந்த விசாரணைகளில் கலந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளார். தொடர்ந்து மோசமடைந்துவரும் உடல்நலத்தால் மருத்துவ அறிக்கைகளும் அவர் உடல் நலம்பெற வாய்ப்பில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளன.
சட்ட அமைச்சரின் பரிசீலனைக்கு இந்த வழக்கை அனுப்பிவைத்த நீதிபதி குற்றவாளியின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் வழங்கப்படும் தண்டனைக் காலத்தை பெயரளவு தண்டனை என்று குறிப்பிட வேண்டும். அதைக்கொண்டு அவரை அதிகபட்சமாக எத்தனை காலம் தடுத்துவைக்கலாம் என்று அமைச்சர் பிறகு முடிவெடுப்பார்.


