இம்மாதம் சில வேலையிடங்களில் நிகழ்ந்த விபத்துகள் காரணமாக ஏழு பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, அபாயங்கள் அதிகம் உள்ள 300 வேலையிடங்களில் சோதனை நடத்த மனிதவள அமைச்சு முடிவெடுத்துள்ளது.
இந்தச் சோதனைகள் அடுத்த மாத நடுப்பகுதி வரை தொடரும் என்று மனிதவள அமைச்சு அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று முன்தினம் குறிப்பிட்டது.
கட்டுமானத்துறை, உற்பத்தித்துறை, கடற்துறை ஆகியவற்றின் வேலையிடங்களில் உயரமான இடங்களில் வேலை செய்வோருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மீறப்படுவது, இயந்திரங்களைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது தொடர்பாக சோதனைகள் நடத்தப்படும்.
இம்மாதம் வேலையிடங்களில் மாண்ட ஏழு பேரில் மூன்று பேர் உயரமான இடத்திலிருந்து விழுந்து இறந்தனர்.
இயந்திரங்களுக்கு நடுவே சிக்கி மூவர் உயிரிழந்தனர். ஒருவர் வேலை தொடர்பாக பயணம் செய்துகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்து மாண்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடுப்பகுதிக்கும் இம்மாத இடைப்பட்ட காலகட்டத்திலும் ஆப்பரேஷன் ராபின் எனும் சோதனைத் திட்டத்தை மனிதவள அமைச்சு நடத்தியது.
அதன்படி பல்வேறு வேலையிடங்களில் 400 சோதனைகள் நடத்தப்பட்டன.
அதிலிருந்து 486 விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஏழு வேலை நிறுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
வேலை முடிந்ததும் சில இயந்திரங்களிலிருந்து சாவி அகற்றப்படாததையும் பாதுகாப்பற்ற முறையில் மின்கம்பிகள் பொருத்தப்பட்டிருந்ததையும் மனிதவள அமைச்சின் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
“விதிமீறல்களை மனிதவள அமைச்சு மிகக் கடுமையான குற்றங்களாகக் கருதுகிறது. ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்படக் காரணமாக இருப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அமைச்சு தயக்கம் காட்டாது,” என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.
கடந்த ஆண்டில் மொத்தம் 30 வேலையிட மரணங்கள் பதிவானதாகவும் இம்மாதம் மட்டும் ஏழு மரணங்கள் பதிவாகியிருப்பதாகவும் மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது கூறினார்.
இது மிகவும் கவலைக்குரியது. முறையான நடவடிக்கைகளின் மூலம் இந்த மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்,” என்றார் அவர்.