‘ஆர்சிஎஸ்எல்’ எனப்படும் ரெட் கிரௌன்ஸ் முதியோருக்கான வசிப்பிடத்தில் வெளிநாட்டுப் பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்தியது தொடர்பில் விதிமீறல் இடம்பெற்றதா என்று மனிதவள அமைச்சு விசாரணை நடத்திவருகிறது.
மூத்த வாடிக்கையளார்களின் நலன், இல்லப் பணிப்பெண்களின் நலன் என இரு அம்சங்கள் குறித்தும் கவலை எழுந்துள்ளதாக அமைச்சு ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளது.
‘ஆர்சிஎஸ்எல்’ நிறுவனத்தின் நடைமுறைப்படி, அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் நான்கு முதியவர்களும் அவர்களைப் பராமரிக்க இரு வெளிநாட்டுப் பணிப்பெணிகளும் இருப்பர்.
அதற்கான மாதக் கட்டணம் $2,900 முதல் $6,300 வரை வசூலிக்கப்படுகிறது. முதியவர்களில் இருவர் அந்தப் பணிப்பெண்களுக்கு முதலாளிகள்.
சிங்கப்பூர் சட்டத்தின்கீழ், முதலாளிகள் பணிப்பெண்களின் உணவு, பாதுகாப்பு, தங்குமிட வசதி, மருத்துவச் செலவு உள்ளிட்டவற்றுக்குப் பொறுப்பேற்பர்.
ஆனால் ‘ஆர்சிஎஸ்எல்’ முதியவர்கள் அனைத்து அம்சங்களுக்கும் பொறுப்பேற்பதில்லை என்று தெரியவந்ததாக அமைச்சு கூறியது. அதுகுறித்த முழுமையான புரிதல் அவர்களுக்கு இல்லை என்றும் அது குறிப்பிட்டது.