தீவெங்கும் உள்ள மதுபானக் கூடங்கள், கேடிவி கூடங்கள் ஆகியவற்றில் அதிகாரிகள் நடத்திய சோதனை நடவடிக்கைகளில் ஒரே இரவில் 280க்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் காவல்துறை, சுகாதார அறிவியல் ஆணையம், மத்தியப் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு ஆகியவற்றுடன் இதர அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 15) சோதனை நடத்தினர். அதில் 640க்கும் அதிகமானோரிடம் சோதனை நடத்தப்பட்டதில் மின்சிகரெட் தொடர்பான குற்றங்களுக்காக 115 பேர் பிடிபட்டனர். அவர்கள் 17லிருந்து 61 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
மின்சிகரெட் நடவடிக்கைகள் அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கும்படி சுகாதார அறிவியல் ஆணையம் சிங்கப்பூர் இரவு வர்த்தகச் சங்கத்துடன் இணைந்து செயல்படுவதாக நேற்று (ஆகஸ்ட் 16) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
பிடிபட்டோரில் ஐவர் கேபோட்ஸ் எனும் எட்டோமிடேட் மின்சிகரெட்டை வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
எட்டோமிடேட் கலந்ததாகச் சந்தேகிக்கப்படும் எட்டு மின்சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதை சுகாதார அறிவியல் ஆணையம் குறிப்பிட்டது.
நார்த் பிரிட்ஜ் சாலைக்கு அருகில் உள்ள கோல்மன் ஸ்திரீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளைத் தமிழ் முரசு நேரில் பார்வையிட்டது.
இரண்டு கேளிக்கைக் கூடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கிட்டத்தட்ட 7 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து கேபோட்ஸ் என்று நம்பப்படும் மின்சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபோன்ற தீவிர சோதனை நடவடிக்கைகள் தொடரும் என்று அதிகாரிகள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
எட்டோமிடேட் சி வகை போதைப் பொருளாக வகைப்படுத்தப்பட்டுவிட்டால் அதைப் பயன்படுத்துவோர் போதைப் பொருள் பயன்படுத்துவோரைப் போல கண்காணிக்கப்படுவதோடு கட்டாய மறுவாழ்வுத் திட்டங்களுக்கோ போதைப் பொருள் மறுவாழ்வு நிலையங்களுக்கோ கண்டிப்பாகச் செல்லவேண்டும்.
மீண்டும் குற்றம் புரிவோருக்கு ஓராண்டு சிறை விதிக்கப்படலாம்.
எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளை விற்பனை செய்வோர், விநியோகிப்போர், இறக்குமதி செய்வோர் பிடிபட்டால் 20 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படக்கூடும்.
கேபோட்ஸ் பயன்படுத்துவோருக்கு உடல் நடுக்கம், பக்கவாதம், மாரடைப்பு ஆகியவை ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்தனர்.