சிங்கப்பூரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 6.8 டன்னுக்கும் அதிகமான உணவுப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அந்த உணவுப்பொருள்கள் தாய்லாந்து மற்றும் மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமலாக்க நடவடிக்கைகள் மண்டாய் லிங், பெனின்சுலா பிளாசா உள்ளிட்ட தீவின் பல்வேறு இடங்களில் மே 11,12,13 தேதிகளில் நடத்தியதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.
சோதனை நடவடிக்கையின் போது அதிக அளவில் பட்டுப்பூச்சிகள், பதப்படுத்தப்பட்ட, பதப்படுத்தப்படாத இறைச்சிகள், பன்றி ரத்தம் சிக்கின.
இறக்குமதி செய்ய தகுந்த உரிமம் இல்லாமல் இவை சிங்கப்பூருக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கப்பூரில் ரத்தம் தொடர்பான உணவுப்பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரத்தம் சார்ந்த பொருள்களில் எளிதாக நுண்ணுயிர் கிருமிகள் வளரக்கூடும், அதே நேரம் புதிதாக நோய்களும் ஏற்படக்கூடும்.