கடந்த மூன்று ஆண்டுகளில் உடற்குறையுள்ளோருக்கான வேலைவாய்ப்புகள் சிங்கப்பூரில் அதிகரித்துள்ளன.
அவர்களுக்கேற்ற வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்காக, பெரும்பாலான நிறுவனங்கள் பணிகளை மாற்றியமைத்து, புதிய பணியிடங்களை ஏற்படுத்துகின்றன.
உணவு, பானச் சேவை வழங்கும் நிறுவனங்கள், விருந்தோம்பல் தொழில்துறை ஆகியவற்றுடன் தளவாடங்கள், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், வங்கி, பொதுத்துறை போன்ற துறைகளிலும் உடற்குறையுள்ளோர் அதிகமாக பணியமர்த்தப்படுவதைக் காண முடிவதாக உடற்குறையுடையோர்க்கான அமைப்பான ‘எஸ்ஜி எனேபல்’ தெரிவித்தது.
2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், கிட்டத்தட்ட 240 காலிப் பணியிடங்கள் உள்ளன என ‘எஸ்ஜி எனேபல்’ அமைப்பின் வேலை நியமன, வேலைத்தகுதிக்கான இயக்குநர் டான் எங் டாட் கூறினார்.
மேலும், இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு இருந்த காலியிட எண்ணிக்கையை ஒத்துள்ளது எனவும் அவ்வாண்டு வேலை தேடிய உடற்குறையுள்ளோரில் ஒவ்வொரு 100 பேருக்கும் 250 காலிப் பணியிடங்கள் இருந்தன எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை அதிகம் என்றும் 100 பேருக்கு 160 என்ற விகிதத்தில்தான் காலிப் பணியிடங்கள் இருந்தன என்றும் அவர் தெரிவித்தார்.
முதன்மையான தொழிலாளர் சந்தையில், வேலையில்லாத ஒவ்வொரு 100 பேருக்கும் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 194 காலியிடங்களும், 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 257 காலியிடங்களும், 2021ஆம் ஆண்டு 160 காலியிடங்களும் இருந்தன என்று தெரிவிக்கப்பட்டது.