சிங்கப்பூரின் வனப்பகுதிகளிலிருந்து வெளிவரும் சுண்டா பேங்கொலின்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சுண்டா பேங்கொலின்கள் சிங்கப்பூரில் உள்ள அரிய வகை விலங்குகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக அவை இரவு நேரங்களில் நடமாடும்.
அவை பெரும்பாலும் வனப்பகுதிகளில் வாழும்.
ஆனால் அண்மைக் காலமாக வழக்கத்துக்கு மாறான இடங்களில் பேங்கொலின்கள் காணப்பட்டுள்ளன.
ஆள் நடமாட்டம் அதிகமுள்ள பல்கலைக்கழக வளாகம், காத்தோங் வட்டாரத்தில் உள்ள வீதிகள் ஆகியவற்றில் அவை காணப்பட்டுள்ளன.
இதுகுறித்து முதல்முறையாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு வனப்பகுதிகளிலிருந்து வெளிவரும் பேங்கொலின்கள் சாலைகளில் வாகனம் மோதி மடியும் அபாயம் அதிகம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வனப்பகுதிகளிலிருந்து வெளிவரும் பேங்கொலின்களை ஆபத்துகளிலிருந்து காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
1996ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சிங்கப்பூரில் உள்ள பல பகுதிகளில் 316 பேங்கொலின்கள் மடிந்ததாகவும் அல்லது காயமடைந்ததாகவும் பதிவு செய்யப்பட்டது.
காயமின்றி ஆரோக்கியமாக காணப்பட்ட பேங்கொலின்களின் எண்ணிக்கை 166 என்று சிங்கப்பூர் இயற்கை மன்றம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பேங்கொலின் தொடர்பான ஆய்வு, பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்த இலக்கு கொண்டுள்ள சிங்கப்பூர் பேங்கொலின் பணிக் குழுவில் சிங்கப்பூர் இயற்கை மன்றம் அங்கம் வகிக்கிறது.
அதில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் லீ கோங் சியான் இயற்கை வரலாற்று அரும்பொருளகம், ‘ஏக்கர்ஸ்’ விலங்குநல அமைப்பு, மண்டாய் வனவிலங்குக் குழு, தேசிய பூங்காக் கழகம் ஆகியவை இடம்பெறுகின்றன.

