போலி அடையாளங்களை பயன்படுத்தி சென்ற ஆண்டு சிங்கப்பூருக்குள் நுழைய அதிகமானோர் முயற்சி செய்ததாக குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 2022ல் அத்தகைய 441 சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டன. 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அந்த எண்ணிக்கை 28ஆக இருந்தது. இது கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகம் என ஆணையம் கூறியது.
போலி அடையாளத்தைப் பயன்படுத்துவோரும் முந்தைய பயணங்களிலிருந்து வேறுப்பட்ட அடையாளத்தைப் பயன்படுத்துவோரும் சிங்கப்பூருக்குள் நுழைய தடை செய்யப்படுவர் எனக் குறிப்பிடப்பட்டது.
பிடிபட்ட பெரும்பாலோர் சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் அல்லது சிங்கப்பூரில் இருந்தபோது வெவ்வேறு குற்றங்களைப் புரிந்தவர்கள்.
சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் அங்க அடையாளச் செயல்முறைகள் மூலம் சோதனை செய்யப்படுகின்றனர். பயணிகளின் கருவிழிகள், முக அடையாளங்கள் ஆகியவை தொழில்நுட்பம் மூலம் சோதனை செய்யப்படுகின்றன.
சென்ற ஆண்டு சிங்கப்பூரிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற பயணிகள், சிங்கப்பூருக்குள் நுழைந்த பயணிகள் ஆகியோரின் மொத்த எண்ணிக்கை 104.9 மில்லியன். 2021ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 5.9 மில்லியன்.

