ஜாலான் புசார் பகுதியில் உள்ள ரோவெல் ரோடு புளோக் 642-ல் வசிக்கும் குடியிருப்பாளர்கள், கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொசுத் தொல்லையால் தூக்கமின்றித் தவித்து வருகின்றனர்.
25 மாடிகளைக் கொண்ட இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், மேல் தளங்களில் வசிப்பவர்களும் கூட இந்தப் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். கொசு விரட்டிகள், மின் பொறிகள் மற்றும் ஜன்னல்களில் வலைகள் பொருத்தியும் எந்தப் பயனும் இல்லை என மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
சபரினா சோவ் என்ற குடியிருப்பாளர் கூறுகையில், கொசுக்களிடம் இருந்து தப்பிக்க ஜன்னல்களை மூடி வைப்பதால் வீட்டில் காற்றோட்டம் இன்றி கடும் வெப்பம் நிலவுவதாகவும், இதனால் இரவில் நிம்மதியாக உறங்க முடிவதில்லை என்றும் தெரிவித்தார்.
தேசிய சுற்றுப்புற வாரியம் (என்இஏ) மேற்கொண்ட சோதனையில், ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அந்தக் கட்டடத்தின் பொது இடங்களில் ஏழு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டன.
அங்கு ஏடிஸ் (Aedes) மற்றும் கியூலெக்ஸ் (Culex) ஆகிய இருவகை கொசுக்கள் உற்பத்தியானது தெரியவந்தது.
குறிப்பாக, இவ்வாண்டில் இதே காலகட்டத்தில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கடந்த 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 55 விழுக்காடு அதிகரித்துள்ளதாக வாரியம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது வடிகால்களைச் சுத்தம் செய்தல் போன்ற உடனடி நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியில் டெங்கி பாதிப்பு ஏதும் இதுவரை இல்லை என்றாலும், கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களின் உரிமையாளர்கள், வர்த்தகங்களின் நிர்வாக மேலாளர்கள், சம்பந்தப்பட்டோர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் குடியிருப்பாளர்கள் தொடர்ந்து ஒருவித அச்சமான சூழலிலேயே இரவு நேரங்களைக் கழித்து வருகின்றனர்.

