சிங்கப்பூர்வாசிகள் உலகின் மிகவும் அருகிவரும் ‘ஹாக்ஸ்பில்’ ஆமைகளை இனி நேரடியாகக் காணலாம்.
சிங்கப்பூர் கடல்வாழ் உயிரினக் காட்சியகத்தின் பராமரிப்பில் எட்டு ‘ஹாக்ஸ்பில்’ ஆமைக் குஞ்சுகள் உள்ளன. இவை முதலில் கூசுத் தீவில் (Kusu Island) இடப்பட்ட முட்டைகளிலிருந்து பொரிந்தவை ஆகும்.
பொதுவாக 1,000 கடல் ஆமைக் குஞ்சுகளில் ஒன்று மட்டுமே பெரிதாக வளரும். பெரும்பாலானவை குஞ்சுகளாக இருக்கும்போது விலங்குகளால் வேட்டையாடப்படுவது, தூய்மைக்கேடு போன்ற பிரச்சினைகளால் இறந்துவிடுகின்றன.
சிங்கப்பூர்க் கடற்கரைகளில் இடப்படும் ஆமை முட்டைகள் ‘சிஸ்டர்ஸ் தீவு’ கடல் பூங்காவிற்கு மாற்றப்படும். அங்கு முட்டைகள் பொரிப்பதற்கேற்ற சூழல் உருவாக்கித் தரப்படும். அந்தக் கடல் பூங்கா தேசியப் பூங்காக் கழகத்தின்கீழ் செயல்படுகிறது.
தற்போது உள்ள எட்டு ஆமைக் குஞ்சுகளும் 2025ஆம் ஆண்டு சிங்கப்பூர்க் கடற்கரைகளில் இடப்பட்ட முட்டைகளிலிருந்து பொரிந்தவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

