தனது பதின்ம வயது மகனை மெத் எனப்படும் போதைப்பொருளைப் புகைக்க அனுமதித்த 52 வயது தாய்க்கு நான்காண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (ஜூன் 5) அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்த மாதின் பெயரை வெளியிட அனுமதி கிடையாது.
போதைப்பொருள் கருவிகளுக்கு சிறாரைப் பழக்கப்படுத்தியது, மெத் உட்கொண்டது ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
குற்றவாளியான அந்த மாது ஈசூனில் தனது கணவருடனும் மகனுடனும் வசித்துவந்தார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நிகழ்ந்தபோது மகனுக்கு 15 வயது.
கடந்த 2022ஆம் ஆண்டு அந்த மாது மெத் புகைக்க ஆரம்பித்தார்.
2025ஆம் ஆண்டு மகன், விட்டுச் செல்லப்பட்ட போதைப்பொருள் கருவிகளைக் கண்டிருக்கிறார். பிறகு மெத் புகைப்பது குறித்து அந்தப் பதின்ம வயது ஆடவர் ஆலோசித்திருக்கிறார்.
பின்னர் அடுத்த சில மாதங்களில் அவர் மெத் புகைத்தார். தனது தாய், வளர்ப்புத் தந்தை இருவரிடமிருந்தும் மெத் போதைப்பொருளைப் பெற்றுவந்தார்.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தாயை சென்ற ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி கைது செய்தது. பிரிவின் அதிகாரிகள் வீட்டில் கண்டெடுத்த போதைப்பொருள் கருவிகள் தனது கணவருக்குச் சொந்தமானவை என்று சொன்ன அந்த மாது தானும் அதைப் புகைத்ததை ஒப்புக்கொண்டார்.

