காவல்துறை அதிகாரியைத் தகாத சொற்களால் திட்டியதற்காகவும் வேண்டுமென்றே அவருக்குக் காயம் விளைவித்ததற்காகவும் 57 வயதுப் பெண்ணும் அவரது 22 வயது மகனும் கைதுசெய்யப்பட்டனர்.
சென்ற திங்கட்கிழமை பிற்பகல் 2.19 மணிக்கு செம்பவாங் டிரைவ் புளோக் 415லிருந்து உதவி கோரப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
அந்த ஆடவர் எட்டாவது தளத்திலிருந்து பூந்தொட்டிகள், கத்திகள், சலவை இயந்திரப் பாகங்கள் ஆகியவற்றை வீசி எறிந்தார் என்று துணை மருத்துவப் படையினர் கூறியதாக ஷின்மின் செய்தி குறிப்பிட்டது.
அந்த ஆடவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அந்தத் துணை மருத்துவப் படையினர் அறிவுறுத்தப்பட்டு இருந்தனர்.
ஆனால், எட்டாவது மாடி மின்தூக்கி கதவு திறந்ததும் அந்த ஆடவர் பூந்தொட்டியையும் கத்தியையும் வீசி எறிந்ததில், துணை மருத்துவப் படை அதிகாரி ஒருவரின் கழுத்தில் இலேசான வெட்டுக்காயம் ஏற்பட்டது.
காவல்துறை வந்ததும் தாயும் மகனும் அவர்களைத் திட்டியதோடு, பெண் அதிகாரி ஒருவரை நோக்கி வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களையும் வீசி எறிந்தனர். இதில் அந்த 30 வயது அதிகாரிக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன.
அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவ்வீட்டிற்குள் நுழைந்து தாயையும் மகனையும் கைதுசெய்தனர்.
தரைத்தளத்தில் கத்திகளும் உடைந்த பூந்தொட்டிகளில் இருந்து சிதறிய மண் நடைவழிகளிலும் மாடிப்படிகளிலும் கிடந்ததைப் படங்கள் காட்டின.
விசாரணை தொடர்கிறது.