ஜோகூர் பாலத்தில் சனிக்கிழமை (மே 16) அதிகாலை நேர்ந்த விபத்தில் 38 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
சிங்கப்பூரை நோக்கிய கடற்பாலச் சாலையில் அவ்விபத்து நேர்ந்தது என்று அதிகாலை மணி 2.28க்குச் சமூக ஊடகப் பதிவு வழியாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.
அதனையடுத்து, நான்கில் மூன்று சாலைத்தடங்கள் போக்குவரத்திற்கு மூடப்பட்டன என்றும் வாகனவோட்டிகள் தாமதத்தை எதிர்நோக்கலாம் என்றும் அப்பதிவில் ஆணையம் குறிப்பிட்டிருந்தது.
பின்னர் சாலைத்தடங்கள் அனைத்தும் போக்குவரத்திற்குத் திறந்துவிடப்பட்டுவிட்டதாக அதிகாலை மணி 4.32க்கு வெளியிட்ட பதிவில் அது தெரிவித்தது.
அதிகாலை 2 மணியளவில் நேர்ந்த விபத்து குறித்துத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்ததாக ‘ஏஷியா ஒன்’ செய்தி கூறியது.
விபத்தில் காயமுற்ற மோட்டார்சைக்கிளோட்டி உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவரது உயிர் பிரிந்தது.
அவருக்கு மனைவியும் எட்டு வயது மகளும் இருப்பதாக அறியப்படுகிறது.
மோட்டார்சைக்கிள், சாலையில் சறுக்கிச் சென்றதால் விபத்து நேர்ந்ததாக முதற்கட்ட விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

