தெம்பனிஸ் விரைவுச் சாலையில் ஒரு லாரியும் ஒரு மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்தவர் உயிரிழந்தார்.
இந்தக் கோர விபத்து வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 15) நிகழ்ந்தது.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை மேல்விவரங்களை வெளியிட்ட காவல்துறை, விபத்தில் சிக்கிய முப்பது வயது மதிக்கத்தக்கவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகக் கூறியது. அவர் சுயநினைவின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதே விபத்தில் சிக்கிய 25 வயது மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டி சுயநினைவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று ஒருவரை செங்காங் பொது மருத்துவமனையிலும் மற்றொருவரை கூ டெக் புவாட் மருத்துவமனையிலும் சேர்த்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
செங்காங் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் உயிரிழந்ததாக அறியப்படுகிறது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 9.20 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது.
எஸ்ஜி ரோட் விஜிலாண்டேயின் ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட காணொளியில் ஈரமான சாலையில் செல்லும் லாரி வழுக்கிச் செல்வதைப் பார்க்க முடிகிறது. அந்த லாரி இரண்டு மோட்டார்சைக்கிள்மீது மோதியது.