தீவு விரைவுச்சாலையில் நடந்த மூன்று கார்கள், லாரி, மோட்டார்சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்தில் மோட்டர்சைக்கிளோட்டி மாண்டார். அவருக்கு வயது 54. இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்தது.
இந்த விபத்து துவாஸ் நோக்கி செல்லும் தீவு விரைவுச் சாலையில் தோ பாயோ லோரோங் 6க்கு முன்னால் உள்ள இடத்தில் நடந்தது எனவும் இது குறித்து தங்களுக்கு சனிக்கிழமை இரவு 7.00 மணிக்குத் தகவல் கிடைத்தது எனக் காவல்துறை கூறியது.
மேலும் அது, அந்த மோட்டர்சைக்கிளோட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது சுயநினைவற்றநிலையில் இருந்தார் என்றும் பின்னர் அவர் மருத்துவமனையில் இறந்துவிட்டார் என்றும் தெரிவித்தது.
இந்த விபத்து நடந்த இடத்தின் காணொளி ஒன்று ‘டெலிகிராமில்’ பதிவிடப்பட்டுள்ளது. அதில் இரண்டு சாம்பல்நிற கார்களுக்குப் பின்னால் லாரி ஒன்று நின்றிருப்பதையும் மோட்டர்சைக்கிள் ஒன்று அந்த மூன்று வாகனங்களுக்கு முன்னர் நிற்பதையும் காண முடிந்தது. வெள்ளை நிறக் காரை அதே வழித்தடத்தில் சிறிது தொலைவில் காண முடிந்தது.
இந்த விபத்துக் குறித்து விசாரணை நடந்து வருகிறது எனக் காவல்துறை தெரிவித்தது.