அரசாங்கச் சேவைத் துறைத் தலைவரான 62 வயது லியோ யிப், 43 ஆண்டுகால சேவைக்குப் பிறகு அரசாங்கத் துறையிலிருந்து ஓய்வுபெறுகிறார்.
கொவிட்-19 காலகட்டத்தின்போது அரசாங்கச் சேவையின் செயல்பாடுகளை அவர் வழிநடத்தினார்.
பிரதமர் அலுவலக நிரந்தரச் செயலாளராகவும் உத்திபூர்வ குழுவின் தலைவராகவும் திரு யிப் பொறுப்புவகித்தார். அவரது பொறுப்புகளை இனி திரு சான் ஹெங் கீ வகிக்கவிருக்கிறார்.
தற்போது தற்காப்பு அமைச்சு, சிறப்புப் பொறுப்புகள் துறை ஆகியவற்றுக்கான நிரந்தரச் செயலாளராக இருக்கும் 57 வயது திரு சான், அந்தப் பொறுப்புகளைக் கைவிடுவார்.
ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மாற்றங்கள் நடப்புக்குவரும் என்று பொதுச் சேவைப் பிரிவு திங்கட்கிழமை (மார்ச் 9) தெரிவித்தது.
திரு யிப் பொதுச் சேவையின் திறனை வலுப்படுத்தவும் புதிய திறன்களை உருவாக்கவும் பலவிதங்களில் பங்களித்தார் என்று பொதுச் சேவைத் துறை பாராட்டியது.
சிங்கப்பூர்க் காவல்துறையின் உபகாரச் சம்பளத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையில் பட்டக்கல்வியை மேற்கொண்ட திரு யிப், 1982ஆம் ஆண்டு விசாரணை அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார்.
படிப்படியாக முன்னேறி கிளமெண்டி காவல்துறைப் பிரிவின் அதிகாரியாக உயர்ந்த திரு யிப், பின்னர் செயல்பாடுகளுக்கான இயக்குநரானார்.
தொடர்புடைய செய்திகள்
திரு லீ குவான் இயூ மூத்த அமைச்சராக இருந்தபோது திரு யிப், அவரின் முதன்மை அந்தரங்கச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.

