எம்ஆர்4 நிலை அமைச்சரின் ஆண்டுச் சம்பளத்தை $1.8 மில்லியனாக உயர்த்த வேண்டும் என்ற மறுஆய்வுக் குழுவின் பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது என்று பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த வருடாந்தர குறியீட்டுச் சம்பளமானது, சிங்கப்பூரில் அதிக வருமானம் ஈட்டும் முதல் 1,000 பேரின் இடைநிலையை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டது. அந்த இடைநிலைத் தொகையானது, $3 மில்லியனுக்கும் சற்று அதிகம் எனக் கூறப்பட்டது.
அதே நேரத்தில், பொதுச் சேவைக்கான 40% தள்ளுபடி முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று அமைச்சர் சான் குறிப்பிட்டார்.
தற்போதைய ‘எம்ஆர்4’ வருடாந்தர குறியீட்டுச் சம்பளத்திற்கும் புதிய குறியீட்டுச் சம்பளத்திற்கும் இடையிலான வேறுபாடு பெரிதாகத் தோன்றினாலும், கடந்த 15 ஆண்டுகளாக அதில் எவ்வித மாற்றமும் செய்யப்படாததே இதற்குக் காரணம் என்று அவர் சுட்டினார்.
அந்தக் காலகட்டத்தைக் கணக்கிட்டால், இந்தச் சம்பளச் சீரமைப்பு ஆண்டிற்கு தோராயமாக 3.6 விழுக்காடு உயர்வையே காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
அதே காலகட்டத்தில், இடைநிலை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 4.3 விழுக்காடும், குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு 4.6 விழுக்காடும் ஆண்டுச் சம்பள உயர்வு கிடைத்துள்ளது.


