சந்தர் சாலையில் உணவகம் ஒன்றுக்கு பனிக்கட்டியில் உறைந்த இறைச்சியை லாரியிலிருந்து இறக்கி விநியோகம் செய்வதில் ஈடுபட்டிருந்தார் 60 வயது சிங்கப்பூரர் ஒருவர்.
அவரிடம் தமது நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த 33 வயது மலேசியர் தமக்கு சில ஐஸ் கட்டிகள் வேண்டுமெனக் கூறினார். அந்த ஐஸ் கட்டிகள் இறைச்சியுடன் கலந்திருப்பதாகக் கூறிய சிங்கப்பூரர் அதைத் தரமுடியாது எனக் கூறிவிட்டார்.
மலேசியர் விடாப்பிடியாக சில ஐஸ் கட்டிகளை எடுத்துச் சென்றுள்ளார்.
பின்னர் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கழித்து அந்த லாரிக்குத் திரும்பிய மலேசியர் இறைச்சியைக் கொத்தித் தொங்கவிடும் கொக்கியை எடுத்து, அதைக் காட்டி மிரட்டி சிங்கப்பூரர் அணிந்திருந்த கல் பதக்கத்துடன் கூடிய சங்கிலியைப் பறிக்க முயன்றார்.
விஜேகுமார் என்ற அந்த 33 வயது மலேசியருடன் போராடிய சிங்கப்பூரர் தமது சங்கிலி பறிபோகாமல் மலேசியரின் கொள்ளை முயற்சியைத் தடுத்தார்.
பின்னர் சிங்கப்பூரர் உதவி கேட்டு சத்தம் போடவே விஜேகுமார் அந்த இடத்தை விட்டு ஓடினார்.
அந்த சிங்கப்பூரர் பின்னர் காவல்துறையில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அன்று பிற்பகல் கிட்டத்தட்ட 3.50 மணிக்கு வெல்டு சாலையில் விஜேகுமாரை கைது செய்தனர்.
அவர் மீது பலவந்தமாக திருட முயற்சி செய்தது, அரசாங்க ஊழியரை பணி செய்ய விடாமல் தடுக்க முயற்சி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
விஜேகுமார் ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அவருக்கு எதிரான மற்றொரு குற்றச்சாட்டு தண்டனை விதிப்புக்காக கருத்தில்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் விஜேகுமாருக்கு ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று 20 மாதச் சிறைத்தண்டனை, 2 பிரம்படிகள் தண்டனையாக விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

