சிங்கப்பூரில் உள்ள ஸ்டார்பக்ஸ் கடைகளில் ஹலால் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளை அகற்றவோ அல்லது மாற்றியமைக்கவோ சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் (முயிஸ்) உத்தரவிட்டுள்ளது.
வியாழக்கிழமையன்று (மே 14) இது குறித்துப் பதிலளித்த முயிஸ், ஸ்டார்பக்ஸ் நிறுவனம் இதுவரை ஹலால் சான்றிதழ் கோரி எந்தவொரு விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியது.
ஹலால் சான்றிதழ் கிடைப்பதற்கு முன்பாகவே, அதற்கான விண்ணப்ப நடைமுறைகள் அல்லது முன்னேற்பாடுகள் நடந்து வருவதாகக் குறிப்பிடுவதற்குச் சற்றும் அனுமதி இல்லை என முயிஸ் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
இத்தகைய அறிவிப்புகள் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் என்றும் இது முயிஸின் ஹலால் சான்றிதழ் விதிமுறைகளை மீறும் செயல் என்றும் அது சுட்டிக்காட்டியது. எனவே, சமூக ஊடகங்கள் மற்றும் கடைகள் என அனைத்து இடங்களிலும் உள்ள இதுபோன்ற தன்னிச்சையான அறிவிப்புகளை உடனடியாக அகற்றுமாறு ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, ஈஸ்ட் கோஸ்ட்டில் உள்ள பார்க்லேண்ட் கிரீன் ஸ்டார்பக்ஸ் கிளையில் ஒரு புதிய அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது. ஹலால் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 2026ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி முதல், கடை வளாகத்திற்குள் செல்லப் பிராணிகளை அனுமதிக்க முடியாது என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து முயிஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

