மத்தியக் கிழக்கு நாடுகளில் உள்ள சிங்கப்பூர் மாணவர்களுக்கு முயிஸ் ஆதரவு

மத்தியக் கிழக்கு நாடுகளில் உள்ள சிங்கப்பூர் மாணவர்களுக்கு முயிஸ் ஆதரவு

1 mins read
0f66ef7c-f694-430d-9fd5-ff5c573b32ff
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சிங்கப்பூர் மாணவர்களுக்கு உதவிவருவதாகச் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் தெரிவித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மத்தியக் கிழக்கின் நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்துவருவதாகச் சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் (முயிஸ்) திங்கட்கிழமை (மார்ச் 2) தெரிவித்துள்ளது.

கெய்ரோ, எகிப்து, ஜெட்டா, சவூதி அரேபியா ஆகியவற்றில் உள்ள தனது மாணவத் தொடர்பு அதிகாரிகள் அந்தந்த நாடுகளில் உள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் தூதரகங்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறிய முயிஸ், ஜோர்தான், எகிப்து, சவூதி அரேபியா, குவைத் ஆகிய நாடுகளில் உள்ள சிங்கப்பூர் மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகக் குறிப்பிட்டது.

“அவர்கள் மாணவர்களுக்குத் தேவையான உதவியையும் ஆதரவையும் வழங்கிவருகின்றனர்,” என்று முயிஸ் சொன்னது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் உள்ள மாணவர்களின் பெற்றோரும் பராமரிப்பாளர்களும் மேல் விவரங்கள் பெற 6359-1199 என்ற எண்ணிலோ info@muis.gov.sg என்ற இணைய முகவரி வழியாகவோ முயிசைத் தொடர்புகொள்ளலாம்.

சிங்கப்பூர் மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதியளித்த முயிஸ், அவர்களுக்கு உதவ அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தது.

“சிங்கப்பூர் மாணவர்களுக்காகவும் சிங்கப்பூரர்களுக்காகவும் தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம். மத்தியக் கிழக்கிலும் கலக்கம் நிறைந்த உலகின் பிற நாடுகளிலும் அமைதி திரும்ப வேண்டிக்கொள்வோம்,” என்று முயிஸ் சொன்னது.

குறிப்புச் சொற்கள்