அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டால் விலங்குகளின் உயிரணுக்கள் மூலம் தயாரிக்கப்படும் இறைச்சி பொதுவாக ‘ஹலால்’ என்பதையும் முஸ்லிம்கள் அவற்றை உட்கொள்ளமுடியும் என்பதையும் முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 3ஆம் தேதி அது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. முஸ்லிம்கள் உட்கொள்ளக்கூடிய விலங்குகளிடமிருந்து உயிரணுக்கள் பெறப்பட்டு, தயாரிப்புச் செயல்முறையில் ‘ஹலால்’ அற்ற பொருள்களின் கலப்படம் இல்லாமல் இருந்தால், அத்தகைய இறைச்சி ‘ஹலால்’ என்று கருதப்படலாம்.
வழக்கமாகப் பண்ணையில் உள்ள விலங்குகளிடமிருந்து இறைச்சி பெறப்படுகிறது. விலங்குகளின் உயிரணுக்கள் மூலம் இறைச்சியைப் பெறுவது மற்றொரு வழியாகும்.
சிங்கப்பூர் உணவு அமைப்பு 2020ஆம் ஆண்டில் இங்கு அத்தகைய உணவுப் பொருள்களின் விற்பனைக்கு ஒப்புதல் வழங்கியது. அதன் பிறகு முஸ்லிம்கள் அவற்றை உட்கொள்ளலாமா என்ற கேள்விகள் எழுந்தபிறகு, அத்தகைய இறைச்சிப் பொருள்களை உட்கொள்வது குறித்த சமய ரீதியான வழிகாட்டுதல் அமைக்கப்பட்டது.
விலங்குகளின் உயிரணுக்கள் மூலம் தயாரிக்கப்படும் இறைச்சியின் ‘ஹலால்’ சான்றிதழுக்கான வழிகாட்டிகளை அமைக்க, சிங்கப்பூர் உணவு அமைப்புடனும் தொழில்துறை உறுப்பினர்களுடனும் இணைந்து செயல்படப்போவதாக முயிஸ் கூறியது.