சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் ஜூன் 7ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுவார்கள் என்று சிங்கப்பூர் முஃப்தி டாக்டர் நஸிருதின் முஹம்மது நசிர் அறிவித்து உள்ளார்.
அவர் இதுதொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தியில், இஸ்லாமிய நாள்காட்டியின் 12வது மாதமான ஜுல்ஹிஜ்ஜா மே 29ஆம் தேதி தொடங்குகிறது என்று தெரிவித்துள்ளார்.
மே 27ஆம் தேதி சூரியன் மறையும் வேளையில் பிறை தென்படாது என்பதை வானியல் கணக்கீடுகள் காட்டுகின்றன. அதன் அடிப்படையில், மே 28ஆம் தேதிதான் நடப்பு இஸ்லாமிய மாதமான ஸுகேதாவின் இறுதிநாள்.
தியாகத் திருநாள் என்று போற்றப்படும் ஹஜ்ஜுப் பெருநாள் ஜுல்ஹிஜ்ஜாவின் 10வது நாளில் கொண்டாடப்படும். மெக்கா புனிதப் பயணத்தின் நிறைவை அது குறிக்கும்.
அந்த வகையில், சிங்கப்பூரில் ஜூன் 7ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது என்று முஃப்தி விளக்கி உள்ளார்.
இந்த ஆசிர்வதிக்கப்பட்ட மாதத்திற்கும் மற்றும் வரவிருக்கும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கும் தமது வாழ்த்துகளை சிங்கப்பூரில் உள்ள எல்லா முஸ்லிம்களுக்கும் தெரிவிப்பதாக முஃப்தி டாக்டர் நஸிருதின் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.