ஸ்டார்ஹப், மைரிபப்ளிக் கண்ணாடியிழை அகண்ட அலைவரிசை (fibre broadband) வாடிக்கையாளர்கள், திங்கட்கிழமை (செப்டம்பர் 30) ஏற்பட்ட சேவைத் தடையால் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மாலை 4 மணி நிலவரப்படி, தீவின் வடகிழக்குப் பகுதியில் “அகண்ட அலைவரிசை கட்டமைப்பில் இணைப்புப் பிரச்சினை”யால் சில வாடிகையாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து மைரிபப்ளிக் நிறுவனத்துக்குத் தெரிய வந்ததாக அதன் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமையும் (செப்டம்பர் 29) இதேபோன்ற ஒரு பிரச்சினை ஏற்பட்டதாக மைரிபப்ளிக் தெரிவித்திருந்தது. அது மூன்று மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது.
இதற்கிடையே, ஸ்டார்ஹப் வாடிக்கையாளர்களும் தாங்கள் எதிர்நோக்கிய சேவைத் தடை குறித்து அந்நிறுவனத்தின் ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர்.
தங்கள் சாதனங்களை அணைத்துவிட்டு அவற்றை மீண்டும் தொடங்குமாறு ஸ்டார்ஹப் ஃபேஸ்புக் பக்கம் வாடிக்கையாளர்களுக்குப் பதிலளித்தது.
இந்நிலையில், பிஸ்னஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஸ்டார்ஹப் பேச்சாளர், அந்நிறுவனத்துக்கு சேவைத் தடை ஏற்படவில்லை என்றார்.
சேவைத் தடையைக் கண்காணிக்கும் ‘டௌண்டிடெக்டர்’ இணையப்பக்கம், பிற்பகல் 2 மணி முதல் ஸ்டார்ஹப், மைரிபப்ளிக் வாடிக்கையாளர்களிடம் இருந்து 2,000க்கும் அதிகமான புகார்கள் எழுந்ததாகக் கூறியது.