பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலை (ஜிசிஇ ‘என்’ நிலை) தேர்வுகளை இவ்வாண்டு எழுதிய மாணவர்கள் தங்களின் முடிவுகளை டிசம்பர் 18ஆம் தேதியன்று பெற்றுக்கொள்வர்.
மாணவர்கள் பிற்பகல் 2 மணியிலிருந்து தங்கள் பள்ளிகளிலிருந்து தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முடிவுகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் குறித்த விவரங்களை பள்ளிகள் வழங்கும் என்று கல்வி அமைச்சும், சிங்கப்பூர் தேர்வு, மதிப்பீட்டுக் கழகமும் தெரிவித்தன.
உடல் நலமில்லாத மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ள பள்ளிக்குச் செல்லக்கூடாது. நேரடியாகச் சென்று முடிவுகளைப் பெறமுடியாதோர், அவற்றைப் பெற்றுக்கொள்ள தங்களின் சார்பில் ஒருவரை நியமிக்கலாம்.
தனிப்பட்ட முறையில் தேர்வை எழுதிய மாணவர்கள் இணையம்வழி டிசம்பர் 18ஆம் தேதி பிற்பகல் 2.45 மணியிலிருந்து தங்கள் சிங்பாஸ் கணக்கு அல்லது பதிவுசெய்தபோது உருவாக்கிய கணக்கை வைத்து தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் பாடத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், டிசம்பர் 18ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கும் டிசம்பர் 21ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கும் இடையே அதன் இணையத்தளத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.