அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘டிரேடர் ஜோஸ்’ நிறுவனம் பலவகை மசாலாப் பொருள்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
அவற்றில் ‘எவ்ரிதிங் பட் த பேகல்’ என்ற எள் தானியம் நிறைந்த ஒரு சமையல் கலவையில் ‘கசகசா’ எனப்படும் ‘பாப்பி’ போதைப்பொருளின் விதை கலந்துள்ளதை தென்கொரிய அதிகாரிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இணையத்திலும் விற்கப்படும் அப்பொருளில் போதை விதைகள் சேர்க்கப்பட்டதை அதன் தயாரிப்புப் பட்டியல் குறிப்பிடுகிறது.
அதன் விவரங்களை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) வெளியிட்ட மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி), தீவிர புலன் விசாரணைகள் நடந்துவருவதாகத் தெரிவித்தது.
தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து அப்பொருளின் விற்பனையை தடுக்கவுள்ளதாக சிஎன்பி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் உறுதிசெய்தது.
சமையலுக்கான அந்த மசாலாப் பொருள் இணையத்தில் விற்பனை செய்யப்படுவதைத் தென்கொரிய காவல்துறை வியாழக்கிழமை தடை செய்தது.
சில வியாபாரிகள் அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது அங்குள்ள டிரேடர் ஜோஸ் கடைகளில் அவற்றை நினைவுப் பொருளாக வாங்கி, தென்கொரியாவுக்குள் கொண்டுவந்ததாக தென்கொரியக் காவல்துறை தெரிவித்தது.
பிறகு அவர்கள் அப்பொருள்களை இணையத்தில் மறுவிற்பனை செய்ததாக அது குறிப்பிட்டது.


